சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் அதிகம் கூடும் மார்க்கெட் மற்றும் வணிக வளாகங்கள் அமைந்துள்ள 9 இடங்களில் அங்காடிகள் செயல்பட நாளை முதல் அனுமதி இல்லை என சென்னை மாநகராட்சி ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “பெருநகர சென்னை மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக தியாகராய நகர் ரெங்கநாதன் தெரு சந்திப்பில் வடக்கு உஸ்மான் சாலை முதல் மாம்பலம் ரயில் நிலையம் வரை உள்ள கடைகளை திறக்க அனுமதியில்லை, புரசைவாக்கம் டவுட்டன் சந்திப்பு முதல் புருக்லின் சாலைவரை உள்ள கடைகளுக்கு அனுமதி இல்லை. திருவல்லிக்கேணி ஜாம் பசார் பாரதி சாலை ரத்னா கபே சந்திப்பு முதல் பெல்ஸ் சாலை சந்திப்புவரை உள்ள கடைகளுக்கும், ராயபுரம் மார்க்கெட் பகுதியில் கல்மண்டபம் சாலை வாட்டர் டேங்க் முதல் காமாட்சி அம்மன் கோவில் வரை உள்ள கடைகளுக்கும், அமைந்தகரை காவல் உதவி மையம் முதல் புல்லா அவென்யூ திருவிக நகர் பூங்கா சந்திப்பு வரை உள்ள கடைகளுக்கும் அனுமதியில்லை. அதேபோல் கொத்தவால் சாவடி மார்க்கெட் நாளை முதல் செயல்பட அனுமதியில்லை” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.