காஷ்மீரின் ஜம்முவில் உள்ள விமானப் படைதளத்தில் டிரோன்கள் மூலம் நேற்று வெடிகுண்டுகள் வீசப்பட்டன. இதில் 2 வீரர்கள் காயமடைந்தனர். இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து ஜம்முவுக்கு அருகே பஞ்சாப்பின் பதான்கோட்டில் உள்ள விமானப்படை தளத்தில் கடும் உஷார் நிலை பிறப்பிக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக விமானப்படை தளம் மற்றும் சுற்றுப்பகுதிகள் முழுவதும் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டு இருக்கிறது.
இதற்காக கூடுதல் படைகள் பதான்கோட்டுக்கு வரவழைக்கப்பட்டு உள்ளன. ஜம்முவில் இருந்து பதான்கோட்டுக்கு வரும் மற்றும் ஜம்முவை நோக்கிச் செல்லும் வாகனங்கள் அனைத்தும் பரிசோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றன.
இதுதொடர்பாக பதான்கோட் மூத்த போலீஸ் சூப்பிரண்டு சுரேந்திர லம்பா கூறுகையில், ‘இந்த வகையான சம்பவம் நிகழும்போதெல்லாம், அண்டை பகுதிகளில் அதிகபட்ச எச்சரிக்கை விடப்படுகிறது. நாங்களும் நிலைமையைக் கருத்தில் கொண்டு பாதுகாப்பில் தீவிரமாக இருக்கிறோம்’ என்று தெரிவித்தார்.
பதான்கோட் விமானப் படைதளத்திலும் கடந்த 2016-ம் ஆண்டு பயங்கரவாத தாக்குதல் நடந்தது குறிப்பிடத்தக்கது.