காபூல் விமான நிலையத்தில் காத்துக் கிடந்த 107 இந்தியர்கள் விமானத்தின் மூலம் தாயகத்திற்கு அழைத்து வரப்படுகின்றனர்.
ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றி விட்டனர். 20 ஆண்டுகளுக்கு முன்னர் பெண்களுக்கு பாதுகாப்பற்ற ஆட்சியாக தலிபான்களின் ஆட்சி திகழ்ந்தது. இருண்ட காலம் என்றே அக்காலம் அழைக்கப்பட்டது. இதனால், தாலிபான்களின் கட்டுப்பாட்டில் இருக்க அச்சப்படும் மக்கள் அங்கிருந்து வெளியேறிக் கொண்டிருக்கின்றனர். பிற நாடுகளும் தங்களது நாட்டு மக்களை அங்கிருந்து பத்திரமாக மீட்டு கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில், ஆப்கானிஸ்தானில் இருக்கும் இந்தியர்களும் சிறப்பு படை விமானங்கள் மூலமாக இந்தியாவிற்கு அழைத்து வரப்படுகின்றனர். இன்று 107 இந்தியர்கள் உட்பட 168 பேருடன் காபூலில் இருந்து இந்திய விமானப்படை விமானம் புறப்பட்டு இருப்பதாக வெளியுறவுத்துறை அதிகாரி தெரிவித்திருக்கிறார்.
இதற்கு முன்னதாக காபூல் விமான நிலையத்தில் இருந்து 200க்கும் மேற்பட்ட இந்தியர்கள் தாயகம் அழைத்து வரப்பட்டனர். 150 இந்தியர்களுடன் புறப்பட்ட விமானத்தை தடுத்து நிறுத்திய தாலிபான்கள் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று ஆவணங்களை சரிபார்த்ததோடு அவர்களை சிறைபிடித்ததாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்தியர்களை மீட்கும் பணி தொடரும் என வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
