தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில் பள்ளிகளை திறக்க தமிழக அரசு முடிவெடுத்தது. இதன் காரணமாக 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. பள்ளிகள் திறக்கப்பட்டால் எடுக்கவேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளையும் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டது. இதனால் பள்ளிகள் திறப்பது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
பள்ளிகளில் ஒரு நேரத்தில் ஒரு வகுப்பில் 50% மாணவர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும். முதல் நாளில் 50 சதவீத மாணவர்களும் மறுநாளில் 50 சதவீத மாணவர்களும் மாறி மாறி பள்ளிக்கு வரவேண்டும். பள்ளி ஆசிரியர்கள். ஊழியர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டு இருக்க வேண்டும். பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு வைட்டமின் சி மாத்திரை, நோய் எதிர்ப்பு மருந்துகள் வழங்க வேண்டும். அனைத்து வகுப்பறைகளிலும் சனிடைசர் சோப்பு கலந்த நீர் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகள் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் செப்டம்பர் 1 முதல் 9 10 11 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகளை திறக்க அரசு உறுதியாக இருக்கிறது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். வகுப்புகளை பாதுகாப்பாக நடத்துவதற்கு நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கியிருக்கிறோம். எனவே பள்ளிகள் திறக்கப்படும் என்று கூறிய அவர், மதுரையைத் தொடர்ந்து திருச்சியிலும் கலைஞர் நூலகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.