கொரோனா மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற கோயில்கள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு முருகப்பெருமான் கோயில்களில் பால்குடம், காவடி எடுப்பது வழக்கம். அத்துடன் முருகன் சந்நிதி உள்ள ஆலயங்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெறும். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வர். ஆனால் தற்போது கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா தினசரி பாதிப்பு 2000ஐ நெருங்கியுள்ளது. இந்த சூழலில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு பக்தர்கள் அதிக அளவில் குவிய தொடங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் இன்று முதல் 3-ம் தேதி வரையிலும் , ஆடி அமாவாசை தினமான ஆகஸ்ட் 8- தேதி ஆகிய நான்கு நாட்களுக்கு பக்தர்களுக்கு தரிசனத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. அதேபோல் ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு நவகிரக கோயில்களில் பிரதானமான சூரியனார் கோயில், கஞ்சனூர் சுக்கிரன் கோயில் இன்று மூடப்பட்டது. 3 நாட்களுக்கு அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தஞ்சை பெரிய கோயில் இன்று மூடப்பட்டது.
இங்கு 3 நாட்களுக்கு அனுமதி இல்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது. கும்பகோணத்தை சுற்றி உள்ள அனைத்து கோவில்களும் ஆடி கிருத்திகையை முன்னிட்டு கூட்டம் கூடுவதை தவிர்க்க பக்தர்களுக்கு 3 தினங்களுக்கு அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா மீண்டும் தமிழகத்தில் வேகமாக பரவி வருவதால் ஆடி கிருத்திகையை முன்னிட்டு கூட்டம் கூடுவதை தவிர்க்க இவ்வாறு முடிவெடுக்கப்பட்டுள்ளது.