சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு நாள் தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவார்கள். அவர்கள் அதிகாலையில் சூரியன் உதயமாகும் காட்சியை பார்த்து விட்டு, பகவதி அம்மன் கோவில் மற்றும் படகுத்துறைக்கு செல்வது வழக்கம். கொரோனா ஊரடங்கு அமலில் இருப்பதால், படகுகள் இயக்கப்படவில்லை. இந்த நிலையிலும் கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகள் வருகிறார்கள்.
அவர்கள் சூரியன் உதயமாகும் காட்சியை பார்த்து விட்டு, பகவதி அம்மனை தரிசனம் செய்ய செல்கிறார்கள். சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்ததை தொடர்ந்து, கடற்கரை பகுதியில் நடைபாதை கடைகளும் அதிகரித்தன. இது சுற்றுலா பயணிகளுக்கு இடையூறாக இருந்தது. அவர்கள் நடைபாதை கடைகளை அகற்ற கோரிக்கை வைத்தனர்.
அதைத்தொடர்ந்து நேற்று காலையில் குமரி மாவட்ட திருக்கோவில் இணை ஆணையர் (கூடுதல் பொறுப்பு) செல்வராஜ் உத்தரவின்பேரில், பகவதி அம்மன் கோவில் மேலாளர் ஆறுமுகநயினார் முன்னிலையில் கோவில் ஊழியர்கள் சுமார் 15 நடைபாதை கடைகளை அகற்றினார்கள். இதனால் சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.