அரிய வகை மரபணு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமி மித்ராவின் மருந்துக்கு இறக்குமதி வரியை ரத்து செய்த நிர்மலா சீதாராமனுக்கு வானதி சீனிவாசன் நன்றி தெரிவித்துள்ளார்
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தைச் சேர்ந்த 2 வயது பெண் குழந்தை மித்ரா அரிய வகை மரபணு நோயால் பாதிக்கப்பட்டார். அக்குழந்தைக்கு சிகிச்சை அளிக்க 16 கோடி ரூபாய் தேவைப்பட்டது. சிகிச்சை அளிக்கவில்லை என்றால் குழந்தைகள் நடக்க முடியாது என்றும் உயிருக்கு ஆபத்து வரும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்து விட்டனர். இதையடுத்து மித்ராவின் பெற்றோர் சமூக வலைதளங்கள் மூலம் தங்களது குழந்தைக்காக நிதி திரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர்.
சிறுமி மித்ராவின் நிலையைக் கண்டு மனமுறுகிய பலர் நிதியுதவி அளித்த நிலையில், சிறுமியின் சிகிச்சைக்கு தேவையான 16 கோடி ரூபாய் நிதி கிடைத்துவிட்டது. எனினும், மித்ராவுக்கு அளிக்கப்பட உள்ள மருந்தை இறக்குமதி செய்ய கூடுதலாக 6 கோடி ரூபாய் தேவைப்பட்டது. அதை திரட்ட முடியாத பெற்றோர் வரிவிலக்கு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அந்த வகையில், தமிழக பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு மித்ராவின் மருத்துவ சிகிச்சைக்கான இறக்குமதி வரியை விலகுமாறு கோரிக்கை விடுத்திருந்தார்.
பலரது கோரிக்கைக்கு இணங்க மித்ராவின் மருந்துக்கான இறக்குமதி வரியை மத்திய அரசு ரத்து செய்துவிட்டது. அந்த குழந்தைக்கு விரைவில் சிகிச்சை அளிக்கப்பட உள்ளது. இந்த நிலையில், சிறுமி மித்ராவின் மருந்துக்கு இறக்குமதி வரியை ரத்து செய்து குழந்தைக்கு இன்னொரு தாயாக மாறினீர்கள் என வானதி சீனிவாசன் உருக்கமாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் வரியை ரத்து செய்ததற்கு மிக்க நன்றி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.