மனித உரிமைகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள நிபந்தனைகளை மீறி, காவல்துறையினரின் கைதுகள் இடம்பெறுவதாக குற்றம் சுமத்தி, மனித உரிமைகள் ஆணைக்குழுவில் ஜே.வி.பி. இன்று முறைப்பாடு செய்துள்ளது.
மனித உரிமைகள் ஆணைக்குழு கடந்த மே மாதம் குறித்த நிபந்தனைகளை வெளியிட்டது.
கொரோனா பரவல் நிலைக்கு மத்தியில், சட்டம் மீறப்படுகின்ற சந்தர்ப்பங்களில், காவல்துறையினர் சட்டரீதியாக செயற்பட வேண்டும் என அந்த நிபந்தனைகளில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
கைது செய்தலானது, சட்டத்தில் உள்ள ஏற்பாடுகளுக்கு அமையவும், குற்றவியல் வழக்குகள் ஏற்பாடுகள், காவல்துறை திணைக்களத்தின் உத்தரவு மற்றும் உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு ஆகியனவற்றைக் கருத்திற்கொண்டு இடம்பெறல் வேண்டும்.
அத்துடன், கொரோனா பரவல் நிலைமைக்கு மத்தியில், தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறும் அனைத்து நபர்கள் தொடர்பில் மேற்கொள்ளும் நடவடிக்கையில் பாகுபாடு காட்டக்கூடாது என்றும் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் நிபந்தனைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இன்று ஜே.வி.பியின் சட்டத்தரணி சுனில் வட்டவல, மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாட்டை பதிவு செய்தார்.
இதன் பின்னர் கருத்து தெரிவித்துள்ள அவர், இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டமை மற்றும் தனிமைப்படுத்தலுக்கு அழைத்துச் செல்லப்பட்டமை முதலான சந்தர்ப்பங்களின் போது குறித்த விடயங்கள் மீறப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.