உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பில் முதலிடம் வகிக்கும் நாடு அமெரிக்கா.
கொரோனா நோய்த்தொற்றுக்கு எதிராகத் தடுப்பூசி போடும் பணியும் அந்நாட்டில் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதனால் சமீப காலமாக அங்கு நோய்த்தொற்று பரவல் குறைந்து வருகிறது.
கொரோனா பரவல் உச்சத்திலிருந்த சமயத்தில் மாஸ்க் அணிவது கட்டாயம் ஆக்கப்பட்டு இருந்தது. கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில் மாஸ்க் அணிவதில் அங்கு புதிய தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.
தடுப்பூசி போட்டுக்கொண்டாலும் கூட்டமான இடங்களில் செல்ல நேர்ந்தால் மாஸ்க் அணிவது கட்டாயம் என்றும், தியேட்டர்கள் போன்ற உள் அரங்கு கூடத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க நேர்ந்தால் கூட்டம் இல்லாவிட்டாலும் மாஸ்க் அணிய பரிந்துரைப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், கொரோனா தடுப்பூசியை முழுமையாக எடுத்துக் கொண்டவர்கள் இனி மாஸ்க் அணிய தேவையில்லை என அமெரிக்கா நோய்க்கட்டுப்பாட்டு தடுப்பு அமைப்பு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக நோய்க்கட்டுப்பாட்டு தடுப்பு அமைப்பின் இயக்குனர் ரோச்சல் வேலன்ஸ்கி கூறியதாவது:
முழுமையாக தடுப்பூசி போட்டுக் கொண்ட எவரும் மாஸ்க் அணியாமல் உட்புற மற்றும் வெளிப்புற நடவடிக்கைகளில் பங்கேற்கலாம். தனி மனித இடைவெளியை பின்பற்றவும் தேவையில்லை. இது உற்சாகமான மற்றும் சக்திவாய்ந்த தருணம்.
இதன்மூலம் நாம் அனைவரும் விரைவில் இயல்பு நிலைக்கு திரும்ப முடியும். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளோர் மாஸ்க் அணியாமல் இருப்பதற்கு முன் தங்கள் மருத்துவர்களுடன் ஆலோசிக்க வேண்டும்.
கொரோனா வைரஸ் கணிக்க முடியாதது என்பதை கடந்த ஆண்டு நமக்குக் காட்டியுள்ளது. எனவே விஷயங்கள் மோசமாகும் நிலையில் இந்த பரிந்துரைகளில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய வாய்ப்புள்ளது என தெரிவித்தார்.