கேரளாவில் கம்யூனிஸ்டு கூட்டணி, காங்கிரஸ் கூட்டணி இடையே யார் ஆட்சியை பிடிப்பது? என்பதில் கடும் போட்டி நிலவுகிறது.
அதே நேரத்தில் பா.ஜனதாவும் இங்கு செல்வாக்கை அதிகரித்து கொள்வதற்கான முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதற்காக பா.ஜனதா முன்னணி தலைவர்கள் கேரளாவில் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்கள்.
தேர்தல் அறிவிப்புக்கு முன்பாகவே பிரதமர் மோடி, அமித்ஷா, ஜே.பி.நட்டா உள்ளிட்ட தலைவர்கள் பிரசாரம் செய்தார்கள். இப்போது தேர்தல் அறிவிப்பு வந்துள்ள நிலையில் மீண்டும் அவர்கள் பிரசாரம் மேற்கொள்கிறார்கள்.
பிரதமர் மோடி கேரளாவில் சுற்றுப்பயணம் செய்து 5 பிரசார கூட்டங்களில் பங்கேற்க திட்டமிட்டுள்ளார். அதே போல அமித்ஷா 7 நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.
அங்கு நடைபெறும் மலப்புரம் எம்.பி. தொகுதி இடைத்தேர்தலில் பா.ஜனதா சார்பில் அப்துல்லாகுட்டி நிறுத்தப்பட உள்ளார். இதன் மூலம் முஸ்லிம்களின் ஓட்டுகளை அதிகமாக பெறலாம் என பா.ஜனதா கருதுகிறது.