கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவிற்கு விற்கவோ குத்தகைக்கு விடவோ அரசாங்கம் தீர்மானிக்கவில்லை என இலங்கைப் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தங்காலையில் செய்தியாளர்களிடம் கருத்துரைத்தபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மேலும் கூறியுள்ளதாவது, “உண்மையில் எதிர்க்கட்சியினர், எம்மீது குற்றம் சுமத்துவதற்கு எதுவுமில்லை.
கிழக்கு முனையத்தை நாம் யாருக்கும் வழங்க மாட்டோம். விற்கவோ, குத்தகைக்கோ வழங்க மாட்டோம். அது எமது கட்டுப்பாட்டிலேயே உள்ளது. தொழிற்சங்கங்களுக்கும் இந்த விடயம் தெரியுமென நான் நினைக்கின்றேன்.
மேலும், விற்பது தொடர்பில் நாம் கலந்துரையாடலைக் கூட நடத்தவில்லை என்பதை நாம் தெளிவாகச் சொல்கின்றோம். எனவே, இதனால் எவ்வித பிரச்சினையும் ஏற்படாது.
அத்துடன் இந்த விடயத்தை முன்னிருத்தி பணிப்பகிஸ்கரிப்பு செய்வதற்கும் ஒன்றுமில்லை. என்னிடம் வந்து கூறினால், நான் உண்மையைத் தெளிவுபடுத்தி இருப்பேன்.
அமைச்சரவையில் 99 வீதமானோர் விற்கக் கூடாது என்ற தீர்மானத்தில் உள்ளனர். தேசிய சொத்துகளையும், வளங்களையும் விற்பது எமது கொள்கை அல்ல.
அது ஐக்கிய தேசிய கட்சியின் கொள்கையாகும். அக்கட்சியின் கொள்கையை முன்னோக்கி கொண்டு செல்வதற்கல்ல, மக்கள் எமக்கு அதிகாரத்தை வழங்கினர்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.