நுவரெலியா- உடபுஸ்ஸலாவ,டெல்மார் கீழ் பிரிவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் ஒரு வீடு முழுமையாக எரிந்து நாசமாகியுள்ளது.
குறித்த வீட்டில் இருந்த 5 பேர் தற்காலிகமாக தோட்ட கழக மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் தீ விபத்து ஏற்பட்டமைக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில் மின் கசிவின் காரணமாக தீ ஏற்பட்டிருக்கலாம் என பிரதேசவாசிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
குறித்த விபத்து சம்பவித்தப்போது, வீட்டிலிருந்தவர்கள் எரிவதை கண்டு கூச்சலிட்டதாகவும் அதன் பிறகு அயலவர்கள் ஓடி வந்து ஏனைய வீடுகளுக்கு தீ பரவாமல் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாகவும் எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த தீ விபத்தில் பெருமளவிலான வீட்டு உபகரணங்கள், பெறுமதியான ஆவணங்கள், தங்க நகைகள், உடுதுணிகள் மற்றும் பாடப் புத்தகங்கள் என பெருமளவிலான பொருட்கள் தீக்கிரையாகியுள்ளன.
இதேவேளை தீ இடம்பெற்ற தோட்டத்திற்கு உடனடியாக விஜயம் செய்த இலங்கை தொழிலாளர், காங்கிரஸின் பொது செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் மற்றும் அரச அதிகாரிகள் ஆகியோர் சம்பவத்தை நேரில் பார்வையிட்டதோடு, பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் ஊடாக பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மேலும் குறித்த விபத்து தொடர்பாக உடபுஸ்ஸலாவ பொலிஸ் நிலையத்திற்கு பிரதேசவாசிகளால் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. அதன்பின் சம்பவயிடத்திற்கு விரைந்த பொலிஸார் தீ பரவலுக்கான காரணங்களை கண்டறிய மேலதிக விசாரணகளை மேற்கொண்டனர்.