விவசாயிகள் போராட்டம், டிராக்டர் பேரணியில் நடந்த வன்முறை போன்ற பரபரப்பான சூழ்நிலைக்கு மத்தியில் பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஜனாதிபதி உரையுடன் கூட்டத்தொடர் தொடங்கியது. வழக்கம் போல, காலை 11 மணிக்கு, மக்களவை, மாநிலங்களவை கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார்.
ஆனால், வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி போராடி வரும் விவசாயிகளுக்கு தங்களது ஒன்றுபட்ட ஆதரவை தெரிவிக்கும் வகையில், காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 19 எதிர்க்கட்சிகள் ஜனாதிபதி உரையை புறக்கணித்தன.
ஜனாதிபதி உரையை புறக்கணிக்கும் எதிர்க்கட்சிகள் பட்டியலில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், தி.மு.க., திரிணாமுல் காங்கிரஸ், சிவசேனா, தேசிய மாநாடு, சமாஜ்வாடி கட்சி, ராஷ்ட்ரிய ஜனதாதளம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், புரட்சிகர சோசலிஸ்டு கட்சி, மக்கள் ஜனநாயக கட்சி, ம.தி.மு.க., கேரள காங்கிரஸ் (எம்), அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி, ஆம் ஆத்மி கட்சி, சிரோமணி அகாலி தளம், பகுஜன் சமாஜ் கட்சி ஆகியவை இடம் பெற்றுள்ளன.