சென்னை: ‘திமுக ஆட்சி அமைந்தவுடன் முதல் 100 நாட்கள் போர்க்கால அடிப்படையில் மக்கள் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதற்காக அர்ப்பணிக்கப்படும். அதில் ஒரு கோடி குடும்பங்கள் தங்களுக்கு ஏற்பட்ட கவலைகள், துன்ப துயரங்களில் இருந்து மீண்டிருப்பார்கள் என்று மு.க.ஸ்டாலின் வாக்குறுதி அளித்துள்ளார். மேலும் அவர் வருகிற 29ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட உள்ளார். சென்னை கோபாலபுரம் இல்லத்தில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் மக்களை நேரில் சென்று சந்தித்து கோரிக்கை மனுக்களைப் பெறும் ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ சுற்றுப் பயணம் குறித்த முக்கிய அறிவிப்பை பத்திரிகையாளர்கள் முன்னிலையில் நேற்று வெளியிட்டார்.
தொடர்ந்து மு.க.ஸ்டாலின் அளித்த பேட்டி: கடந்த 10 ஆண்டுக்கால அதிமுக ஆட்சியில் தமிழகம் எல்லா துறைகளிலும் எல்லா வகையிலும் அதல பாதாளத்திற்கு போய் விட்டது. தமிழக உரிமைகளை மத்திய அரசிடம் அடகு வைத்தது. பெரிய முதலீடுகளை ஈர்க்க முடியாத மாநிலமாகத் தமிழகத்தை மாற்றியது. வேலைவாய்ப்பை உருவாக்காமல் பல லட்சம் இளைஞர்களின் வாழ்க்கையைக் கேள்விக்குறி ஆக்கியது. இப்படி நம்பி வாக்களித்த மக்களுக்குத் துரோகம் செய்த அரசு தான் அதிமுக அரசு. முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் தொகுதிகளில் கூட எதுவும் நடக்கவில்லை. கொரோனா பெருந்தொற்று காலத்தில் மக்களை முழுமையாக இந்த அரசு கைவிட்டு விட்டது.