முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மீண்டும் ஆட்சி அமைய பாடுபடுவோம் என்று ஜெயலலிதா பேரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்து. கூட்டத்திற்கு பேரவை செயலாளரும், அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் தலைமை தாங்கினார்.
இ்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு, ஜெயலலிதா பிறந்தநாளை உற்சாகமாக கொண்டாட வேண்டும் என்றும், சட்டமன்ற தேர்தலில் ஜெயலலிதா பேரவை நிர்வாகிகள் துடிப்புடன் தேர்தல் பணியாற்ற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
* வரும் 30-ந்தேதி மதுரை, டி.கல்லுப்பட்டி டி.குன்னத்தூரில் ஜெயலலிதா கோவிலை திறந்து வைக்க வரும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை வரவேற்பது, நல உதவிகள் வழங்க இந்த கூட்டம் தீர்மானிக்கிறது.
* கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் தொண்டர்களின் ஓய்வறியா உழைப்பினை ஒருங்கிணைத்து, அரவணைத்து செயல்படுத்தி தேர்தல் பணியினை முன்னெடுத்து சென்றிடவும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஜெயலலிதா அரசு மீண்டும் அமைய துணை நின்று உழைப்போம் என இந்த கூட்டம் சபதம் ஏற்கிறது.
போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.