எரிபொருள் விநியோக நடவடிக்கைகளை வழமை போன்று முன்னெடுப்பதற்கு பாதுகாப்பு தரப்பினரின் ஆதரவை பெற்றுக்கொள்ளவுள்ளதாக மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
எரிபொருள் தட்டுப்பாடு குறித்து மக்கள் பீதியடைய வேண்டாம் எனவும் அமைச்சர் தனது டுவிட்டர் பக்கத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை பெற்றோலிய சேமிப்பு முனையத்தின் ஊழியர்கள் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பு காரணமாக எரிபொருள் விநியோகம் தடைப்பட்டிருந்த போதிலும் தற்போது அது வழமைக்குத் திரும்பியுள்ளது.
மேலும், நாட்டில் போதுமான எரிபொருள் இருப்பு இருப்பதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லையென இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இடையூறு இன்றி எரிபொருள் விநியோகம் செய்யப்படுவதாக ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள விசேட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் பல்வேறு பெற்றோலிய தொழிற்சங்கங்கள் பணகப்புறக்கணிப்பை மேற்கொண்டுள்ள நிலையில், எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சத்தினால் பல எரிபொருள் நிலையங்களில் நீண்ட வரிசைகள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.