வட மாகாணத்தில் மாவட்டங்களுக்கு இடையே கால்நடைகளை கொண்டு செல்வதற்கான சுகாதார அனுமதிப்பத்திரம் வழங்கும் செயற்பாடு இடைநிறுத்தப்பட்டுள்ளது.
வட மாகாணத்தின் சில பகுதிகளில் கால்நடைகளிடையே பரவும் வைரஸ் தொற்று காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம், வைத்தியர் ஹேமாலி கொத்தலாவல குறிப்பிட்டுள்ளார்.
அம்மை நோய் தொற்றுக்குள்ளான சுமார் 25 கால்நடைகள் உயிரிழந்துள்ளதாக கூறிய அவர், கால்நடைகள் இடையே இந்த தொற்று தொடர்ச்சியாக நீடிக்காது என தெரிவித்துள்ளார்.
அம்மை நோய் தொற்றுக்குள்ளான கால்நடைகளை தனியாக பராமரிப்பதனூடாக தொற்று பரவும் வீதத்தை குறைக்க முடியும் என அவர் குறிப்பிட்டார்.
இந்த விடயம் தொடர்பில் வட மாகாணத்தில் நோய் தொற்றுக்குள்ளான கால்நடைகளின் மாதிரிகள் பெறப்பட்டுள்ளதுடன், அது தொடர்பான ஆய்வு நடவடிக்கைகளை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம், வைத்தியர் ஹேமாலி கொத்தலாவல இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.