உக்ரைனுக்குள் நுழைந்த ரஷ்ய இராணுவம், தலைநகர் கீவ் மற்றும் 2வது பெரிய நகரமான கார்கிவ் உள்ளிட்ட இடங்களை குறிவைத்து தாக்கி வருகின்றதுடன், சில இடங்கள் முழுமையாக ரஷ்யாவின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளன.
இந்நிலையில், உக்ரைனின் வெளியுறவு மந்திரி டிமிட்ரோ குலேபா, செர்னிஹிவில் தரையிறங்கிய வெடிக்கப்படாத வெடிகுண்டு ஒன்றின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
உக்ரைனின் வெளியுறவு மந்திரி டிமிட்ரோ குலேபா நேற்று உக்ரைனின் வான்வெளியை விமானங்கள் பறக்க தடை மண்டலமாக அறிவிக்க நேட்டோவுக்கு அறிவுறுத்தியிருந்தார்.
ரஷ்யப் படைகள் நாட்டை ஆக்கிரமித்ததில் இருந்து ஆயிரக்கணக்கான உக்ரைன் குடிமக்களின் உயிர்களை பல வெடிகுண்டுகள் சிதறடித்துள்ளன என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
இது குறித்து டிமிட்ரோ தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இந்த பயங்கரமான 500 கிலோ ரஷ்ய வெடிகுண்டு செர்னிஹிவ் நகரில் உள்ள குடியிருப்பு கட்டிடத்தில் விழுந்து வெடிக்கவில்லை. பல அப்பாவி ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர்.
மேலும் ரஷ்ய காட்டுமிராண்டிகளிடமிருந்து எங்கள் மக்களைப் பாதுகாக்க எங்களுக்கு உதவுங்கள்! வானத்தை மூட எங்களுக்கு உதவுங்கள். எங்களுக்கு போர் விமானங்களை வழங்குங்கள்.” என்றும் கூறியுள்ளார்.