தமிழகத்தில் பதற்றத்தை உருவாக்க முயற்சியில் பாமக, வன்னியர் சங்கம் ஈடுபட்டு வருகின்றன.. இவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுத்து, எந்தவித மிரட்டலுக்கும் பணியாமல் நடிகர் சூர்யாவின் படத்தை வெளியிடுவதற்கு உகந்த சூழலை உருவாக்க தமிழக அரசு முன்வரவேண்டும் என்று தமுஎச கோரிக்கை விடுத்துள்ளது.
ஜெய்பீம் படம் வெளியானதில் இருந்தே பாமக, வன்னியர் சங்கம் போன்றவை நடிகர் சூர்யா மீது கடுமையான அதிருப்தியிலும் கோபத்திலும் உள்ளன.
சூர்யா நடித்த படங்களை திரையிடக்கூடாது என்பது முதல் சூர்யா மன்னிப்பு கேட்க வேண்டும் என்பது வரை பல்வேறு வகைகளில் சூர்யாவுக்கு எதிராக போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன..
.பிறகு அந்த படத்திதன் டைரக்டர் வருத்தம் தெரிவித்ததை அடுத்து அனைத்து சர்ச்சைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டன. இப்போது சூர்யாவின் அடுத்த படம் எதற்கும் துணிந்தவன், மார்ச் 10-ம் தேதி தியேட்டர்களில் வெளியாக போகிறது.. இதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கடலூர் மாவட்ட திரையரங்கு உரிமையாளர்களிடம் மாவட்ட பாமகவினர் மனு ஒன்று அளித்து வருகின்றனர்.
அந்த மனுவில்,ஜெய்பீம் படத்தில் வன்னியர்களின் அடையாளமான அக்னி கலசத்தை அவர் வீட்டில் காட்சிப்படுத்தியுள்ளனர். ஒட்டு மொத்த வன்னிய சமுதாய மக்கள் சாதிவெறி வன்மம் உள்ளவர்கள் போல அப்படத்தில் காட்டியுள்ளனர். சகோதரத்துவமாக உள்ள இருளர், வன்னியர் சமுதாயத்தில் சாதி வன்மத்தைத் தூண்டும் விதமாக இத்திரைப்படம் எடுத்திருப்பது வன்னியர்களை கொச்சைப்படுத்தும் விதமாக உள்ளது.வன்னியர்களை வன்முறையாளர்களாகவும் தொடர்ந்து சித்தரித்து வரும் நடிகர் சூர்யாவின் 'எதற்கும் துணிந்தவன்' திரைப்படத்தை சூர்யா வன்னியர் மக்களிடம் பொது மன்னிப்பு கேட்கும் வரை கடலூர் மாவட்டத்தில் ஒளிபரப்ப அனுமதிக்கக்கூடாது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்குதான் தமுஎச எனப்படும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கண்டனம் தெரிவித்துள்ளது.. பாமக, வன்னியர் சங்கத்துக்கு கண்டனம் தெரிவித்தும், சூர்யாவுக்கு ஆதரவு தெரிவித்தும் ஒரு அறிக்கையை தமுஎச மாநிலத்தலைவர் மதுக்கூர் இராமலிங்கம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், "திரைக்கலைஞர் சூர்யா உள்ளிட்டவர்கள் நடித்துள்ள "எதற்கும் துணிந்தவன்" திரைப்படம் 10.03.2022ஆம் தேதியன்று வெளியாகவிருக்கும் நிலையில், இப்படத்தை திரையிடக்கூடாதென பாட்டாளி மக்கள் கட்சியினரும் வன்னியர் சங்கத்தினரும் திரையரங்க உரிமையாளர்களை கடிதம் மூலம் மிரட்டிவருவதற்கு தமுஎகச கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறது.
2021 நவம்பரில் வெளியான ஜெய்பீம் படம், வன்னியர்களை அவமதித்துவிட்டதாகவும் அதற்காக அப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரும் கதாநாயகருமான சூர்யா மன்னிப்பு கேட்கும் வரை அவர் தொடர்புடைய எந்தவொரு படத்தையும் திரையிட அனுமதிக்கமாட்டோம் என்றும் அப்போது பாமகவினர் மிரட்டல் விடுத்திருந்தனர். அந்த மிரட்டலின் தொடர்ச்சியில்தான் இப்போது எதற்கும் துணிந்தவன் படத்தை திரையிடக்கூடாதென அக்கட்சியினரும் வன்னிய சங்கத்தினரும் மிரட்டிக் கொண்டுள்ளனர்.