கோவையில் 76 மாத பஞ்சப்படி உயர்வு வழங்க வலியுறுத்தி, ஓய்வுபெற்ற போக்குவரத்துக் கழக ஊழியர்கள் அரசு பணிமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழக அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்கள், தங்களுக்கு வழங்க வேண்டிய 76 மாத பஞ்சப்படி உயர்வை மற்றும் பணப்பலன்களை வழங்க வலியுறுத்தி, நேற்று தமிழகம் முழுவதும் 7 இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். இதன் ஒரு பகுதியாக, கோவை மேட்டுப்பாளையம் சாலை சாய்பாபா கோவில் பகுதியில் உள்ள அரசுப் போக்குவரத்து கழக தலைமை அலுவலகத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்ட ஓய்வு பெற்ற போக்குவரத்துக் கழக ஊழியர்கள் முற்றுகையிட்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், 6 ஆண்டுகளாக போராடி பெற்ற பஞ்சப்படி உயர்வை கடந்த 76 மாத காலமாக வழங்காமல் அரசு இழுத்தடிப்பதாக குற்றம்சாட்டினர். இதனால், உடனடியாக பஞ்சப்படி உயர்வை வழங்க வேண்டும் என முழக்கங்களை எழுப்பினர். மேலும், உடனடியாக அரசு ஓய்வூதிய பிரதிநிதிகளை அழைத்துப்பேசி தீர்வு காண வேண்டும், அதுவரை போராட்டம் தொடரும் என தெரிவித்தனர்.