அம்பாறை திருக்கோவிலை பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட எஸ்.பி. கனகசபாபதி இன்று கனடாவில் உயிரிழந்துள்ளமை மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இவர் 90 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அம்பாறை திருக்கோவில் முருகன் ஆலயத்தின் படம் பொறிக்கப்பட்ட கனேடிய முத்திரையை வெளியிட்டவர் ஆவார்.
கனகசபாபதி, பூபாலபிள்ளை (1945-6-20) மட்டக்களப்பு, திருக்கோவிலைச் சேர்ந்த எழுத்தாளர் ஆவார்.
இவரது தந்தை பூபாலபிள்ளை; தாய் சுந்தரம்மா. இவர் திருக்கோயில் மெதடிஸ்த மிசன் பாடசாலை, கல்லடி இராமகிருஷ்ணமிசன் சிவானந்த வித்தியாலயம் ஆகியவற்றில் கல்வி கற்றுப் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைமாணிப் பட்டத்தைப் பெற்றார்.
இவர் எஸ். பி.செவ்வேள், கதா, கனெக்ஸ், கல்கிதாசன் ஆகிய புனைபெயர்களைக் கொண்டவர். திருஞானவாணி, அறப்போர் அரியநாயகம், மட்டக்களப்பு மாநிலத்தின் பண்டைய வரலாற்று அடிச்சுவடுகள், கல்கிதாசன் கவிதைகள், தேரோடும் திருக்கோவில் ஆகியன இவரது நூல்கள். கனடாவில் வெளிவந்த முதல் சஞ்சிகையான 'எழில்' சஞ்சிகையின் ஆசிரியராகப் பணியாற்றிய இவர், கூத்துக் கலையில் ஈடுபாடு கொண்டு வில்விஜயன் என்னும் வடமோடிக் கூத்தைக் கனடாவில் பழக்கி அரங்கேற்றியவர்.