திண்டுக்கல் மேற்கு மரியநாதபுரம் பகுதியை சேர்ந்த மாணிக்கம் என்பவரது மகன் ராகேஷ். 26 வயதான அவர் தனது நண்பர்களுடன் இரவு நேரத்தில்
செட்டிகுளம் பகுதியில் உள்ள குளத்தின் கரையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது திடீரென அங்கு வந்த மர்மநபர்களில் ஒருவர் துப்பாக்கியால் ராகேஷ் நோக்கி சுட்டுள்ளார். இதில் விலாப்பகுதியில் குண்டு பாய்ந்தது. காயத்துடன் உயிருக்கு போராடிய ராகேசை, நண்பர்கள் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் வழியிலேயே அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து அறிந்த திண்டுக்கல் சரக டிஜஜி மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர்.
தடயவியல் நிபுணர்கள் அங்கிருந்த தடயங்களை சேகரித்தனர். போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடும் பணி தீவிரப் படுத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் திண்டுக்கல் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.