இந்தியாவுக்கான கொலம்பியா, உருகுவே, ஜமாய்க்கா, ஆர்மீனியா ஆகிய நாடுகளின் தூதர்கள் சமீபத்தில் நியமிக்கப்பட்டனர். அவர்கள் நேற்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை காணொலி காட்சி மூலம் சந்தித்தனர்.
இந்தியாவுடனான உறவை வலுப்படுத்த பாடுபடுவதாக அவர்கள் உறுதி அளித்தனர். அவர்களுக்கு ஜனாதிபதி வாழ்த்து தெரிவித்தார்.
பின்னர், அவர்களிடையே காணொலி காட்சி மூலம் அவர் பேசியதாவது:-
உங்கள் அனைவரது நாடுகளுடனும் இந்தியாவுக்கு நல்லுறவு நிலவுகிறது. அமைதி, வளமை என்ற பொதுவான கண்ணோட்டத்தில் இந்த உறவு மிகவும் ஆழமானது.
கொரோனாவுக்கு எதிரான சர்வதேச நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதில் இந்தியா முன்னணியில் உள்ளது. உலகத்தின் மருந்தகமே இந்தியாதான்.
கொரோனாவுக்கு எதிரான உலகளாவிய போரில், அத்தியாவசிய மருந்துகளையும், உபகரணங்களையும் எண்ணற்ற நாடுகளுக்கு அனுப்பி வைத்து இந்தியா உதவி இருக்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.