கொரோனா பரவல் காரணமாக மெரினா கடற்கரைக்கு செல்ல பொதுமக்கள் இன்னும் அனுமதிக்கப்படவில்லை. கடந்த 50 நாட்களாக இந்த தடை உள்ளது.
இந்த நிலையில் கடந்த மாதம் 28-ந்தேதி முதல் ஊரடங்கு தளர்வின் ஒரு பகுதியாக மெரினா கடற்கரையில் நடைபயிற்சிக்கு மட்டும் தமிழக அரசு அனுமதி அளித்தது.
காலை 6 மணியில் இருந்து 9 மணி வரையில் 3 மணி நேரம் மட்டுமே நடைபயிற்சி மேற்கொள்ள பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதை தொடர்ந்து கடந்த 4 நாட்களாக மெரினா கடற்கரையில் தினமும் நடைபயிற்சிக்காக மக்கள் கூடுகிறார்கள். ஒவ்வொரு நாளும் ஆயிரம் பேர் வரையில் நடைபயிற்சி செய்கிறார்கள்.
இதுபோன்று நடைபயிற்சி மேற்கொள்கிறவர்கள் கொரோனா விதிமீறல்களில் ஈடுபடுகிறார்கள். மாஸ்க் அணியாமல் செல்வதுடன் ஒருவருக்கு ஒருவர் உரசியப்படியும் நடந்து செல்கிறார்கள். இதுபற்றி போலீசுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் மெரினா கடற்கரையில் நடைபயிற்சியின் போது கண்காணித்து அறிவுரை வழங்க உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து இணை கமிஷனர் ராஜேந்திரன், துணை கமிஷனர் பகலவன் ஆகியோர் மேற்பார்வையில் திருவல்லிக்கேணி உதவி கமிஷனர் பாஸ்கர், இன்ஸ்பெக்டர் கண்ணன் ஆகியோர் இன்று கொரோனா விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். நடைபயிற்சி சென்றவர்களை சந்தித்து கொரோனா விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று அறிவுரை கூறினார்கள்.
இது தொடர்பாக ஒலி பெருக்கி மூலம் அறிவிப்புகளை வெளியிட்டனர். முக கவசம் அணியாமல் நடைபயிற்சி மேற்கொள்ள கூடாது. சமூக இடைவெளியை கடைபிடித்து நடைபயிற்சி செய்ய வேண்டும் என்பது போன்ற அறிவுரைகள் வழங்கப்பட்டன.
நடைபயிற்சியை முடித்து விட்டு பலர் மெரினா கரையோரம் அருகருகே அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அவர்களுக்கும் போலீசார் அறிவுரை வழங்கினார்கள்.
மெரினா கடற்கரையில் நரிக்குறவர்கள் பலர் குடும்பத்தோடு அமர்ந்து இருந்தனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் மாஸ்க் அணியாமல் இருந்தனர். இதையடுத்து உதவி கமிஷனர் பாஸ்கர் அவர்களுக்கு மாஸ்க் வழங்கி கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
இதுபோன்று அருகருகே அமர்ந்து பேசினால் கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் அவர்களிடம் போலீசார் அறிவுறுத்தினார்கள்.
மெரினா கடற்கரையில் நடைபயிற்சிக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில் ஒருசிலர் தடையை மீறி மணல் பகுதிகளுக்கு சென்று விடுகிறார்கள். இதுபோன்ற நபர்களையும் போலீசார் கடற்கரையில் இருந்து வெளியேற்றி வருகிறார்கள்.
இப்படி கடற்கரை பகுதியில் யாராவது நடமாடுகிறார்களா? என்பதை டிரோன் மூலம் கண்காணித்தனர். இது தொடர்பாக போலீசார் கூறும்போது, “பொதுமக்களின் நலன் கருதி மெரினாவில் நடைபயிற்சிக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அதனை உணர்ந்து விழிப்புணர்வோடு செயல்பட வேண்டும். கொரோனா பரவுவதற்கு வழி ஏற்படும். எனவே அஜாக்கிரதையாக இருக்க வேண்டாம் என்றும் தெரிவித்தனர்.