முன்னாள் முதலமைச்சரை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்ற ஆம் ஆத்மி கட்சியின் எம்.எல்.ஏ.வின் தாய், துப்புரவு பணியாளராக பணியாற்றி வருகின்றமை அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் மொத்தம் உள்ள 117 இடங்களில் 92 இடங்களைக் கைப்பற்றி ஆம் ஆத்மி கூட்டணி ஆட்சி அமைக்கிறது.
இந்த நிலையில் ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் பகதவுர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற லப் சிங் உகோகே, தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
இவர் போட்டியிட்ட அதே தொகுதியில் தான் முன்னாள் முதலமைச்சர் சரண்ஜித் சிங் சன்னி போட்டியிட்டார். அவரை 37,550 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து அபார வெற்றி பெற்றுள்ளார் உகோகே.
லப் சிங் உகோகேயின் தாயார் பல்தேவ் கவுர், அரசுப் பள்ளியில் துப்புரவு பணியாளராக பணியாற்றி வருகிறார். தனது மகன் பஞ்சாபில் 2022 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆன பிறகும், பல்தேவ் கவுர் வழக்கம் போல் தனது பணியைத் தொடர்ந்து வருகிறார்.தனது வாழ்க்கையில் ‘ஜாடு’ (துடைப்பம்) முக்கிய அங்கம் வகிப்பதாக பெருமிதத்துடன் குறிப்பிட்ட அவர், தனது பணியை வழக்கம்போல் தொடரப்போவதாக தெரிவித்தார்.