ஈரோட்டில் காதல் தோல்வியால் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஈரோடு கிருஷ்ணம்பாளையம் சிந்தன் நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் பிரவீன் (20). இவர் பெண் ஒருவரை காதலித்து வந்ததாகவும், அது தோல்வியில் முடிந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால், அவர் மனமுடைந்து காணப்பட்டுள்ளார். இந்த நிலையில், நேற்று முன்தினம் பிரவீன் வீட்டில் உள்ள தனது அறையில் தூங்கிக் கொண்டிருந்தார். நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படாததால் பிரவீன் பெற்றோர்கள் கதவை தட்டி உள்ளனர். ஆனால் எந்த ஒரு பதிலும் வரவில்லை.
இதனால் சந்தேகமடைந்த, பெற்றோர் ஜன்னல் வழியாக சென்று பார்த்தபோது, பிரவீன் தூக்கு போட்டு தொங்கிக் கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அறைக்குள் சென்று பிரவீனை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
தகவல் அறிந்த கருங்கல்பாளையம் போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். மேலும், இதுகுறித்து புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த கருங்கல்பாளையம் போலீசார், பிரவீன் காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்டார? அல்லது, வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.