தமிழகத்தில் வடகிழக்குப் பருவ மழையினால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து மீள மத்திய அரசு நிதி வழங்கிட வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் இந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் வரலாறு காணாத மழை பெய்த சூழ்நிலையில், தமிழ்நாடு அரசு விரைவாக நிவாரண பணிகளை மேற்கொண்டு, குறுகிய காலத்தில் இயல்பு நிலையை மீட்டெடுத்துள்ளது.
பெருமழையினால் ஏற்பட்ட சேதங்களை மதிப்பிடுவதற்காக, மத்தியக் குழுவினர் கடந்த நவம்பர் 21-ம் தேதி தமிழ்நாட்டில் ஆய்வு மேற்கொண்டனர்.
தமிழ்நாட்டில் தற்காலிக சீரமைப்புப் பணிகளுக்காக 1,510.83 கோடி ரூபாயும், சாலைகள், பாலங்கள் மற்றும் பொதுக் கட்டடங்கள் போன்ற சேதமடைந்த உள்கட்டமைப்புகளை நிரந்தரமாக சரி செய்வதற்காக 4,719.62 கோடி ரூபாயும் நிவாரணமாக வழங்கிடக் கோரி தமிழக அரசு நவம்பர் 16, நவம்பர் 25, டிசம்பர் 15-ஆகிய தேதிகளில் விரிவான அறிக்கையுடன் கடிதம் எழுதியுள்ளது. இருப்பினும் மத்திய அரசிடம் இருந்து பதில் வரவில்லை.
கொரோனா பெருந்தொற்று காரணமாக மாநில அரசின் நிதி நிலைமை பாதிக்கப்பட்டுள்ள இந்தச் சூழ்நிலையில், மழை, வெள்ள பாதிப்புகள் மேலும் அதை கடுமையாக்கியுள்ளது. மாநிலப் பேரிடர் நிவாரண நிதியும் தற்போது முழுமையாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.
எனவே தமிழ்நாட்டில் வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சரிசெய்யவும், சேதமடைந்த உட்கட்டமைப்புகளை புனரமைக்கவும், போக்குவரத்து, நீர்ப்பாசனம், கல்வி போன்றவற்றை மீண்டும் வழக்கமான நிலைமைக்குக் கொண்டு வரவும் தேவையான நிதியினை ஒதுக்கீடு செய்து வழங்கிட உள்துறை அமைச்சகத்திற்கு பிரதமர் மோடி அறிவுறுத்த வேண்டும்.
இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.