சென்னை விமான நிலையத்தில் இருந்து அண்ணாசாலை, சென்ட்ரல் வழியாக திருவொற்றியூர் விம்கோநகர் வரை ஒரு வழித்தடத்திலும், மற்றொரு மார்க்கமாக விமான நிலையத்தில் இருந்து ஆலந்தூர், ஈக்காட்டுத்தாங்கல், அசோக் நகர், வடபழனி, கோயம்பேடு, திருமங்கலம், அண்ணாநகர், கீழ்ப்பாக்கம், எழும்பூர், சென்ட்ரல் வழியாக திருவொற்றியூர் விம்கோ நகருக்கு ரெயில்கள் சென்று வருகின்றன.
மொத்தம் 45 கி.மீட்டர் தூரத்துக்கு ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இதில் 23 கி.மீட்டர் தூரம் சுரங்கத்திலும், 22 கி.மீட்டர் வழித்தடம் மேம்பாலம் வாயிலாகவும் ரெயில்கள் இயக்கப்படுகிறது.
இதையடுத்து மெட்ரோ ரெயில் சேவையை விரிவாக்கம் செய்ய மாநில அரசு திட்டமிட்டது. அதன்படி 2-ம் கட்டமாக 3 வழித்தடங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
1.மாதவரம்- சிறுசேரி சிப்காட் வரை
2.மாதவரம் - சோழிங்கநல்லூர் வரை
3. கலங்கரை விளக்கம்- பூந்தமல்லி வரை
இதற்கான பூர்வாங்க பணிகள் சென்னையின் பல இடங்களில் நடைபெற்று வருகிறது.
இதையொட்டி முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் நடைபெற்று வரும் மெட்ரோ ரெயில் திட்ட பணிகளை இன்று காலை 11.30 மணியளவில் நேரில் சென்று பார்வையிட்டார்.
தலைமைச் செயலகத்தில் இருந்து சென்ட்ரல் வந்த அவர், அங்கு நடைபெற்று வரும் மெட்ரோ ரெயில் திட்ட பணிகளை பார்வையிட்டார். சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள், லிப்ட் அமைக்கும் பணிகள், சதுக்கம் உருவாக்கும் பணிகளை ஆய்வு செய்தார்.
மெட்ரோ ரெயில் திட்ட அதிகாரிகள் அவருக்கு அங்கு நடைபெறும் பணிகள் குறித்து விளக்கிக் கூறினார்கள்.
அதன் பிறகு கிண்டி கத்திப்பாராவில் நடைபெற்று வரும் நகர்ப்புற சதுக்கம் மற்றும் மேம்பாட்டு பணிகளை ஆய்வு செய்தார். அதன்பிறகு போரூர் ராமச்சந்திரா மருத்துவமனை அருகே மெட்ரோ ரெயில் நிலைய திட்ட பணிகளை ஆய்வு செய்தார். அங்கு அமைய உள்ள தெள்ளியகரம் மெட்ரோ ரெயில் நிலைய பணிகளை பார்வையிட்டார்.
முதல்- அமைச்சருக்கு மெட்ரோ ரெயில் நிலைய பணிகளை அதிகாரிகள் விவரித்தார்கள். அங்கு நடைபெறும் கட்டுமான பணிகளை சுமார் 20 நிமிட நேரம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மெட்ரோ ரெயில் திட்டம்2-ம் கட்டத்தின் கீழ் செயல்படும் வழித்தடங்களில் பணிகளை விரைந்து செயல்படுத்த மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.